Apr 5, 2009

கல்லறைபூக்கள்


அதோ
அவள் பயணப்பட
ஆயத்தமாகிவிட்டாள்...
’ஓடிச் சென்று
கட்டியணைத்து
என்னை விட்டு போகாதே’
என்று
கத்திக் கதறத்
தவியாய் தவிக்கிறது
மனம்...
கால்களும், கண்களுமோ
எட்டி நின்றே
பார்க்கிறது!

இதோ
செல்கிறாள் அவள்
சொந்தங்கள்
படை சூழ...
தடுக்கத் துணிகிறது
கைகள்
தடுமாறி தடம்புரள்கிறது
கால்கள்
பல ஆயிரம் ஊசிகள்
குத்துகிறது நெஞ்சில்
விழியிலிருந்து வழிகிறது
கண்ணீர்
இதைத் துடைக்கவாவது
வேண்டும் நீ எனக்கு!

அலறிக்
கூப்பாடு போடுகிறது
மனம்
உதடுகளோ அசையாமல்
புரிகிறது மெளனம்
இயலாமை என்னை
கூனிக் குறுக வைக்கிறது
இதயத் துடிப்பின் வேகம்
கூடிக் கொண்டே போகிறது
மெள்ள மெள்ள
கண்களில்
இருள் சூழ..
விலகிச் செல்லும்
உணர்வை
நன்றாகவே உணருகிறேன்!

இப்பொழுது
ஆத்மாவாய்
அவளை தேடி செல்கிறேன்...
சொந்தங்கள் அவளை
அடக்கி விட்டார்கள்
அழகாய்
வண்ண வண்ண
மலர்கள் அடுக்கிய
பெட்டியினுள்..
நானோ கிடக்கிறேன்
நடுத் தெருவிலே
நரிகள் தின்னும்
பிணமாய்!!